அரசு எந்தவொரு நல்ல திட்டத்தைச் செயல்படுத்த நினைத்தாலும் திமுகவினர் அதைச் செய்ய விடுவதில்லை என்று அமைச்சர் ஸ்ரீநாத் குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடியில் ‘தூத்துக்குடியில் இருந்து உலகம்’ என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு மற்றும் அகில இந்திய தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2026 சிறப்பாக நிறைவடைந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் கலந்துகொண்டு, புதிய தொழில் முனைவோர்களின் சாதனைகளைப் பாராட்டிச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தெரிவித்தது: சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குக் கார் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த 59 உறுப்பினர்கள் தங்களுக்குக் கார் வேண்டாம் எனக் கூறி வருகின்றனர்.
அரசு எந்தவொரு நல்ல திட்டத்தைச் செயல்படுத்த நினைத்தாலும் திமுகவினர் அதைச் செய்ய விடுவதில்லை. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள், பிற உறுப்பினர்களைச் 'சங்கி' எனக் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அனைவரும் சட்டப்பேரவையில் எதையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளோம்.

