தமிழகச் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசிய கருத்து தொடர்பாக, அவரது சார்பில் முதல்வர் விஜய் அவையில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசுகையில், முன்னாள் முதல்வர் என்று குறிப்பிடாமல் மறைந்த கருணாநிதியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுக் கருத்துத் தெரிவித்தார்.
அமைச்சர் ரஞ்சித் குமார் பேசுகையில்: "திருமங்கலம் ஃபார்முலா முதல் 2026 வரை ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் திட்டம் வரை கருணாநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி திமுக உறுப்பினர் அடுக்கடுக்காகக் கூறி வந்தார். 2026-ல் ஒரு ரூபாய் கூட ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் எங்கள் முதல்வர் ஆட்சிக்கு வந்திருக்கிறார்" என்று கூறினார்.
முன்னாள் முதல்வர் குறித்து அமைச்சர் பேசிய விதம் அவையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் ரஞ்சித் குமார் பேசிய அந்த குறிப்பிட்ட கருத்துக்கள் சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகப் பேரவைத் தலைவர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகப் பேசிய முதல்வர் விஜய், தனது அமைச்சரின் பேச்சுக்காக அவையில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
அப்போது முதல்வர் விஜய் பேசுகையில்: "உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான். அவர் சார்பாக நான் சாரி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார். அமைச்சரின் பேச்சுக்காக முதல்வரே பேரவையில் மன்னிப்பு கோரிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

