ஏரலில் உள்ள தாமிரபரணி ஆற்றின் பழைய தரைப்பாலத்தில் திடீரெனப் பள்ளம் ஏற்பட்டதால் கனரக வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள தாமிரபரணி ஆற்றின் பழைய தரைப்பாலத்தில் திடீரெனப் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தொழில், கல்வி மற்றும் வியாபார நிமித்தமாக தினந்தோறும் ஏரலுக்கு வந்து செல்கின்றனர். தாமிரபரணி ஆற்றின் தென்பகுதியிலிருந்து ஏரலுக்கு வர மக்கள் ஆற்றின் உயர்மட்டப் பாலம் மற்றும் பழைய தரைப்பாலம் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வந்தனர்.

பழைய தரைப்பாலத்தில் நடுவில் திடீரெனப் பெரிய பள்ளம் விழுந்துள்ளது. மேலும், இந்தப் பாலத்தின் இரு பக்கங்களிலும் பாதுகாப்பிற்கான தடுப்பு கம்பிகள் எதுவும் இல்லை. இவ்வழியாக அரசுப் பேருந்துகள், பள்ளி வாகனங்கள், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து சென்று வந்ததால், பெரிய அளவிலான விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. இது குறித்து புகார்கள் சென்றன.

புகாரின் பேரில், திருச்செந்தூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று மாலை தரைப்பாலத்தின் இரண்டு முகப்புகளிலும் தடுப்புக் கம்பிகளை அமைத்துப் போக்குவரத்தைத் தடை செய்தனர். விதிவிலக்காக இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் அளவிற்குச் சிறிய வழிவிட்டு மற்ற பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்து உள்ளிட்ட அனைத்துப் பெரிய வாகனங்களும் உயர்மட்டப் பாலம் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

தரைப்பாலத்தில் விழுந்துள்ள பள்ளத்தைச் உடனடியாகச் சீரமைத்து, இருபுறமும் தடுப்புக் கம்பிகள் அமைத்து, இரவு நேரத்தில் தெளிவாகத் தெரியும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டிப் போக்குவரத்தை மீண்டும் முழுமையாகத் தொடங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.