இனி வரும் 5 ஆண்டுகளில் அதிவேகமாக நிறைவேற்றப்பட்டு இந்தியா புதிய உயரத்தை எட்டும் என்று நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, லட்சக்கணக்கான தியாகிகளின் உயிர்த்தியாகத்தால் பெற்ற 80-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறோம். வந்தே மாதரம் பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், செங்கோட்டையில் முதன்முறையாக அப்பாடல் பாடப்படுவது மிகுந்த பெருமையளிக்கிறது.

பிரதமர் தனது உரையில் தமிழகத்தின் திருப்பூர் ஜவுளித்துறையின் பங்களிப்பைப் பற்றிப் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.விவசாயிகள் மற்றும் மீனவர்களை உள்ளடக்கிய சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் உரம் விலை உயர்ந்த போதிலும், இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் உரங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள், இனி வரும் 5 ஆண்டுகளில் அதிவேகமாக நிறைவேற்றப்பட்டு இந்தியா புதிய உயரத்தை எட்டும். வரும் காலம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் (Quantum) தொழில்நுட்பங்களின் காலம். எனவே உற்பத்தித் துறையின் வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தரமான பொருட்களை உருவாக்க வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை ஆற்றல் சேமிப்பு மற்றும் கடல் பொருளாதாரம் (Blue Economy) ஆகியவற்றில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் பெருமளவில் உள்ளன. உலக நாடுகள் தங்களது எரிபொருள், தொழில்நுட்பம் மற்றும் எல்லைகளை ஆயுதமயமாக்கி வரும் சூழலில், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உற்பத்தி ஆயத்தங்கள் தொடர்ந்து வலுவடையும் என்றும் பிரதமர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.