அமெரிக்காவில் கடந்த 27 ஆண்டுகளாகச் சட்டப்பூர்வமாக வசித்து வரும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், கிரீன் கார்டு மற்றும் நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் குடியேற்றத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கரோலினாவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றி வரும் வெங்கடா வசம்செட்டி, கடந்த 27 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்குக் குற்றப் பின்னணி எதுவுமில்லை. இவரது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் அனைவரும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள் ஆவார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 'கிரீன் கார்டு' உரிமமும் வைத்துள்ளார்.

கடந்த 2022 ஜூலை மாதம் இந்தியாவில் இருந்த தனது வயதான பெற்றோரைப் பார்க்க வந்த வசம்செட்டிக்குக் கொரோனா தொற்று மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் 7 மாதங்கள் கழித்து 2023 பிப்ரவரியில்தான் அமெரிக்கா திரும்பினார். கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் நீண்ட காலம் அமெரிக்காவிற்கு வெளியே தங்குவது குறித்துக் கேள்விகள் எழுப்பப்படுவது வழக்கம்.

இதன் அடிப்படையில் அவர் மீது நாடுகடத்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட நிலையில், தான் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த மே 19-ஆம் தேதி நாடுகடத்தப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவர் மீதான வழக்கை முடித்து வைத்தது.

வழக்கு முடிந்த உத்தரவு நகலுடன் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி சார்லோட்டில் உள்ள குடியேற்ற அலுவலகத்திற்கு வழக்கமான சோதனைக்காகச் சென்றபோது, நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு வரவில்லை எனக் கூறி அதிகாரிகள் அவரைத் திடீரெனக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வசம்செட்டி, அங்கிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள ஜார்ஜியா மாகாணத் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்குத் தேவையான இன்சுலின் மற்றும் மருத்துவப் பொருட்கள் கூட வழங்கப்படாமல் தடுப்பு மையத்தில் துன்புறுத்தப்படுவதாக அவரது குடும்பத்தினரும் வழக்கறிஞரும் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சைசெயலுக்கு எதிராக அவரது குடும்பத்தினர் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.