குடிநீர் வசதி கோரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டுத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் செங்கல்படை ஊராட்சிக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரைப் பணம் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கால்நடைகளை வளர்ப்பதிலும் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

முறையான குடிநீர் வழங்கக் கோரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்து, குமாரபுரம் கிராம மக்கள் இன்று காலை 9 மணி முதலே காலி குடங்களுடன் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தனர்.

காலை 11 மணி கடந்து மதியம் 12 மணி ஆகியும் அதிகாரிகள் யாரும் மனு வாங்க முன்வராததாலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரும் அலுவலகத்திற்கு வராததாலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள், BDO அறை முன்பாக அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 12 மணி முதல் 12.45 மணி வரை அலுவலகத்தில் எந்த அதிகாரியும் இல்லாததால் அங்குப் பெரும் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து தாமதமாக வந்த திட்ட மேலாளர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். "குடிநீர் வழங்குவதற்கான புதிய திட்ட அறிக்கை மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது; உடனடியாகக் குடிநீருக்கு மாற்று வழி செய்ய ஏற்பாடு செய்து தருகிறோம்" என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இப்போராட்டம் குறித்துக் குமாரபுரம் கிராம மக்கள் தெரிவித்ததாவது: 25 ஆண்டு பழமையான பைப்லைன்: கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட போர் பைப்லைன் வாரம் இருமுறை உடைந்து விடுவதால் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதை உடனடியாக மாற்றித் தர வேண்டும்.

குடிநீருக்காக 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்திற்குச் செல்ல வேண்டி உள்ளது. அங்கும் தண்ணீர் கிடைக்காத போது பணம் கொடுத்துத் தண்ணீர் வாங்கும் அவலை நிலை உள்ளது. புதிதாக போர் அமைத்துத் தருவதாகக் கூறி ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

காலை 9.30 மணிக்கு வந்தும் மதியம் 1 மணி வரை மனுவைப் பெறக்கூட அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லை. எனவே, தங்களின் கிராமத்திற்கு உடனடியாகத் தடையில்லா முறைப்படுத்தப்பட்ட குடிநீர் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.