தமிழக பாஜக சார்பில் கட்சியின் நிர்வாகிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலும், கட்சியின் கொள்கைகள், அமைப்பு செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் செப்., 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

முகாமின் முதல் நாளான செப்., 18ல், கட்சியின் வரலாறும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.தொடர்ந்து கருத்தியல் பரிமாணங்கள் குறித்தும், கட்சியின் கொள்கைகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

மேலும், தேசத்தின் முன் உள்ள சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளில் நமது முயற்சிகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறுகிறது. இதில் நாட்டின் வளர்ச்சி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நிர்வாகிகளுடன் கருத்துப் பரிமாற்றம் நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான செப்., 19ல், நிர்வாகிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உடற்பயிற்சி மற்றும் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, கட்சியின் அடிப்படை அமைப்பான பூத் மேலாண்மை, நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் மற்றும் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய அரசின் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. மேலும், இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களின் முக்கியத்துவம், அவற்றை கட்சி பணிகளில் பயன்படுத்தும் விதம் குறித்து கலந்துரையாடல் நடைபெறுகிறது.

இந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளர்களாக மாநில பொதுக்குழு உறுப்பினர் திருநாகரன் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் வழிகாட்டுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணி மற்றும் பிரிவுகளின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.