தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே பரமன்பச்சேரி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சமுத்திரவேல் (48). கொத்தனார் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மூத்த மகள் ஸ்ரீவள்ளி (18), சில்லாங்குளத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல சமுத்திரவேல் கொத்தனார் வேலைக்கும், அவரது மனைவி மாரியம்மாள் ஆடு மேய்க்கும் வேலைக்கும் சென்றுவிட்டனர். மாலையில், மாரியம்மாள் வீடு திரும்பியபோது, வீட்டின் மின்விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் ஸ்ரீவள்ளி தூக்கில் தொங்கிய நிலையிலிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்களின் உதவியுடன் அவரைத் தூக்கிலிருந்து கீழே இறக்கினர். எனினும் ஸ்ரீவள்ளி ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பசுவந்தனை காவல் நிலையப் போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை சமுத்திரவேல் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீவள்ளி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

