» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பி.எம்.சி மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை: ஆட்சியர், எஸ்பி பாராட்டு
புதன் 22, ஜூன் 2022 10:13:54 AM (IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சாதனை புரிந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கற்பகம் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு: தமிழ் 96 ஆங்கிலம் 99 கணிதம் 99 அறிவியல் 100 சமூக அறிவியல் 100. தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார். சாதனை மாணவி கற்பகத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் ஆகியோரும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மாணவிகள் சினேகா மற்றும் ஜெஸ்னா சாரோன் ஆகியோர் முறையே 491 மற்றும் 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2, 3ம் இடத்தைப் பெற்றுள்ளனர். பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வில் சாதித்த மாணவிகளை பி.எம்.சி பள்ளியின் நிர்வாகி முனைவர். இ.ஜோசப் ஜான் கென்னடி, பள்ளி முதல்வர் திருமதி. பால்கனி, துணை முதல்வர் ஜேன் மேத்யூ, தலைமையாசிரியை திருமதி. அனிதா ஹாரி, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் பாராட்டினர். மாணவி பயிலும் பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்னதாக வெளியான 12ம் வகுப்பு பொதுத்தேர்விலும் 100 சதவீத தேர்ச்சி பெற்றதுடன் தொடர்ந்து பல ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.