» சினிமா » செய்திகள்
உயர்நீதிமன்றத்தில் ட்ரோன் மூலம் படப்பிடிப்பு: பிச்சைக்காரன்-2 படக்குழுவினர் கைது
செவ்வாய் 13, டிசம்பர் 2022 5:09:47 PM (IST)
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக பிச்சைக்காரன்-2 படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ல் வெளியான பிச்சைக்காரன் படம் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தினை சசி இயக்கினார். இந்த படத்தின் வெற்றியால் விஜய் ஆண்டனியின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. தெலுங்கில் பிச்சக்காடு என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டு அங்கும் வசூல் குவித்தது. பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தினை விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக கூறி படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அனுமதி பெறாமல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தாக கூறப்படுகிறது.