» சினிமா » செய்திகள்
கல்யாணம் செய்துகொள்ளாமல் விஷால் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்: உதயநிதி கலாய்!!
செவ்வாய் 26, ஜூலை 2022 11:17:09 AM (IST)
நடிகர் சங்கம் கட்டிடத்தை காரணமாக வைத்து விஷால் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என உதயநிதி கலாய்த்துள்ளார்.
இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படம் 'லத்தி'. ராணா புராடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா - நந்தா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், சுனைனா நாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணியை பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா தோட்டா ஆகியோர் கவனிக்கின்றனர்.
இந்நிலையில், படத்தின் டீசர் வெளியீட்டு விழா நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், 'நானும் விஷாலும் இணைந்து படம் நடிக்க வேண்டியது. ஆனால், இதுவரை நடக்கவில்லை. நானும் விஷாலும் பள்ளிக்கு ஒன்றாக சென்றோம்.. கல்லூரிக்கு ஒன்றாக சென்றோம்.. அவ்வளவுதான்.. அதற்கு மேல் சொல்ல முடியாது. விஷால் இதற்கு முன்னதாக அசிஸ்டன்ட் கமிஷனர், கமிஷனர் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து தற்போது ப்ரோமோஷனில் கான்ஸ்டபிள் ஆகியுள்ளார்.
நான் சமீபத்தில் நடித்த 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தில் சண்டை, பாட்டு என ஏதும் இருக்காது. நான் தேர்வு செய்யும் கதையில் சண்டை இருக்காது. ஆனால் விஷால் அதற்கு நேர்மாறாக இருப்பார். நடிகர் சங்கம் கட்டிடத்தை விரைவில் கட்டவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். விஷால் அதை வைத்து தான் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். பள்ளியில் யோசிக்காமல் பொய் சொல்வது நான் தான்'' என்றார்.
தொடர்ந்து பேசிய விஷால், ''அவன்-இவன் படத்தில் நான் நடித்த பின்பு தான் என்னுடைய நடிப்பின் மீதான மரியாதை கிடைத்தது. அந்தப் படத்தில் கடைசி 10 நிமிடம் பாலா சார் எனக்கு கொடுத்தார். அதே போல் இந்தப் படத்தில் இயக்குநர் வினோத் எனக்கு கடைசி 10 நிமிட காட்சி கொடுத்திருக்கிறார். அப்போது ரமணா மற்றும் நந்தாவிடம் 12 கேமராக்கள் வைத்துவிடுங்கள். நான் என்ன நடிக்க போகிறேன், எப்படி நடிக்க போகிறேன் என்று தெரியாது. மீண்டும் அதை நடிக்க முடியுமா என்றும் தெரியாது என்றேன். அதே போல் அந்த காட்சி படமாக்கப்பட்டது. இது போன்ற வாய்ப்புகள் தான் ஒரு நடிகனுக்கு மரியாதையை ஈட்டி தரும்'' என்றார்.