» சினிமா » செய்திகள்
பயில்வான் ரங்கநாதனின் பின்னணியில் தனுஷ்: கமிஷனர் அலுவலகத்தில் சுசித்ரா பரபரப்பு புகார்
வெள்ளி 10, ஜூன் 2022 5:32:40 PM (IST)
நடிகர், நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து வரும் பயில்வான் ரங்கநாதனின் பிண்ணணியில் நடிகர் தனுஷ் இருப்பதாக பாடகி சுசித்ரா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பத்திரிகையாளராக அறியப்படும் பயில்வான் ரங்கநாதன், சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக யூடியூப் சேனல்களில் நடிகர், நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து வருகிறார். இதனால் அவர் மீது பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் யூடியூப் பக்கம் ஒன்றில் பாடகி சுசித்ரா குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதுகுறித்து பயில்வான் ரங்கநாதனை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட சுசித்ரா, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்னைப் பற்றி தவறான தகவல்களைத் தெரிவித்தீர்கள் என்று கேட்க, கார்த்திக் குமார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே பேசியதாக பயில்வான் ரங்கநாதன் பதிலளித்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் மீது பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார். மேலும் கடந்த 2017 ஆம் சசி லீக்ஸ் விவகாரம் குறித்து நான் அளித்த புகாரில் நடிகர் தனுஷ், கார்த்திக் குமார் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தேன். தற்போது பயில்வான் ரங்கநாதன் பின்னணியிலும் தனுஷ், கார்த்திக் குமார் இருக்கலாம் என சந்தேகம் இருக்கிறது என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.