» சினிமா » செய்திகள்
தலீபான்கள் ஆட்சியை இந்திய இஸ்லாமியர்கள் கொண்டாடுவது ஆபத்தானது- நடிகர் நஸ்ருதீன் ஷா கவலை
வியாழன் 2, செப்டம்பர் 2021 4:27:12 PM (IST)
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை இந்திய இஸ்லாமியர்கள் கொண்டாடுவது ஆபத்தானது என நடிகர் நசிருதீன் ஷா கவலை தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.
இதற்கிடையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர். ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையை குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இந்தி திரைப்பட நடிகர் நசிருதீன் ஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "ஆப்கானில் தலீபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது உலகம் முழுவதும் கவலைக்குரியதாக இருந்தாலும், இந்திய இஸ்லாமியர்கள் சிலரின் காட்டுமிராண்டி தன கொண்டாட்டங்கள் ஆபத்தானவை" எனத் தெரிவித்துள்ளார். இஸ்லாத்தில் சீர்திருத்தம் மற்றும் நவீனத்துவம் வேண்டுமா? அல்லது கடந்த சில நூற்றாண்டுகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் தொடர வேண்டுமா? என்று ஒவ்வொரு இந்திய இஸ்லாமியர்களும் தங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்" என நசுருதீன் ஷா தனது பதிவில் கேட்டுள்ளார்.