» சினிமா » செய்திகள்

இந்தியன்-2 பட விவகாரத்தில் தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 1, ஜூலை 2021 11:33:48 AM (IST)

இந்தியன்-2 பட விவகாரத்தில் தீர்வு காண ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமித்து உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் 2-ம் பாகத்தை இயக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டார். இதில் நடிப்பதற்காக நடிகர் கம்ல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இந்த படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். இதனால் படப்பிடிப்பு பல நாட்கள் தடைப்பட்டது. இதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் இறங்கியதாலும், கொரோனா பரவல் காரணமாகவும் படப்பிடிப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. 

இதற்கிடையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ஒரு படத்தை இயக்குவதற்கும், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குவதற்கும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இதனால் இந்தியன் -2 திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் இந்தியன்-2 திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல் பிற படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. படத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை விட அதிக அளவில் செலவு செய்திருப்பதாகவும், கடந்த மார்ச் மாதம் படத்தை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.

இதற்கு இயக்குனர் சங்கர் தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், இந்த படத்தை தில்ராஜ் என்பவர் தயாரிக்க இருந்ததாகவும், அவரை சமாதானப்படுத்தி இந்த படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் முன்வந்ததாகவும் சங்கர் கூறியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியன்-2 படத்துக்கான முன்தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டு, 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்கப்பட்ட முடிவு செய்யப்பட்டதாகவும், படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் பட்ஜெட் முடிவு செய்யப்பட்ட நிலையில், அதனை குறைக்க லைக்கா நிறுவனம் கேட்டுக்கொண்டதால் 250 கோடியாக பட்ஜெட்டை குறைத்ததாகவும் சங்கர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியதாக லைக்கா நிறுவனத்தின் மீது இயக்குனர் சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த படத்தை முதலில் திட்டமிட்டபடி தில்ராஜ் தயாரித்திருந்தால், படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும் என்றும் அரங்கம் அமைப்பது, நிதி ஒதுக்கீடு செய்வது, ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தாமதம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு தாமதமானதாக இயக்குனர் சங்கர் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பை துவங்க தயாராக இருந்ததாகவும், அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பினரும் கலந்து பேசி தீர்வு காணுமாறு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தியன்-2 பட விவகாரத்தில் லைகா நிறுவனம், இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டதோடு இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory