» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் வண்ணமயமான தொடக்க விழா: முதல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி!

சனி 1, ஏப்ரல் 2023 3:09:53 PM (IST)



ஐபிஎல் தொடக்க விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை தோல்வி அடைந்தது. 

ஐபிஎல் தொடக்க விழாவில் சுமார் 40 நிமிடங்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதல் 30 நிமிடங்கள் அர்ஜித் சிங்கின் தனது இசை மற்றும் பாடலால் ரசிகர்களை மகிழ்வித்தார்.  தொடர்ந்து நடிகைகளான தமன்னா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடினர். விஷால் நடித்த ‘எனிமி’ படத்தில் இடம் பெற்ற மனசோ இப்ப தந்தி அடிக்குது பாடல், அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் இடம் பெற்ற உ சொல்றீயா மாமா மற்றும் சில இந்தி பாடல்களுக்கு தமன்னா நடனமாடினார்.

வணக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று கூறியபடி மேடையில் தோன்றிய ராஷ்மிகா புஷ்பா படத்தின் ஐயா சாமி சாமி, ஸ்ரீவள்ளி பாடல், ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் மற்றும் சில இந்தி பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இதைத்தொடர்ந்து சிஎஸ்கே கேப்டன் தோனி விழாமேடைக்கு வந்தார். தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் டிராபியை மேடையில் கொண்டு வந்து வைத்தார். தொடர்ந்து வாணவேடிக்கைகள் நிகழ்வுடன் தொடக்க விழா நிறைவு பெற்றது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சருடன் 92 ரன் விளாசினார். மொயின் அலி 23, பென் ஸ்டோக்ஸ் 7, ஷிவம் துபே 19, அம்பத்தி ராயுடு 12, டோனி நாட்அவுட்டாக 14 ரன் எடுத்தனர். 



குஜராத் பவுலிங்கில், முகமது ஷமி, ரஷித்கான், அல்சரி ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய குஜராத் அணியில் விருத்திமான் சகா 25 (16 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்னில் ஹங்கர்கேக்கர் பந்தில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் சுப்மான் கில் 36 பந்தில், 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன் விளாசி வெளியேறினார். கடைசி 2 ஓவரில், 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தீபக் சாஹர் வீசிய 19வது ஓவரில், ரஷித்கான் ஒரு சிக்சர், பவுண்டரி விளாச 15 ரன் எடுத்தனர். 

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவையான நிலையில், தேஷ்பாண்டே முதல் பந்தை வைடாக வீச அடுத்த பந்தில் திவாட்டியா சிக்சரும், 3வது பந்தில் பவுண்டரியும் விரட்டினார். 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன் எடுத்த குஜராத் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. ரஷித்கான் 10 (3பந்து), திவாட்டியா 15 (14பந்து) ரன்னில் களத்தில் இருந்தனர். ரஷித்கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். கடந்த சீசனில் 2 போட்டியிலும் குஜராத்திடம் வீழ்ந்த சென்னை, நேற்று 3வது போட்டியிலும் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது.

தோல்விக்கு பின் சிஎஸ்கே கேப்டன் டோனி அளித்த பேட்டி: நாங்கள் இன்னும் 15-20 ரன் கூடுதலாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பனி இருக்கும் என்று நாம் அனைவரும் அறிந்ததே. மிடில் ஓவர்களில் நன்றாக பேட்டிங் செய்திருக்கலாம். ருதுராஜ் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவரது பேட்டிங் டைமிங் மிக அருமையாக இருந்தது. அவரின் பேட்டிங்கை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. இளைஞர்கள் அடுத்து அடி எடுத்து வைப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். 

பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக வருவார்கள் என்று நம்பலாம். ஆனால் ஒரு விஷயம் நோபால் என்பது பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எனவே அவர்கள் இந்த விஷயத்தில் தங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஹங்கர்கேக்கரிடம் நல்ல வேகம் இருக்கிறது. அவர் நல்ல பந்துவீச்சாளராக வருவார். இரண்டு இடது கை வீரர்கள் வேண்டுமென்று நினைத்தேன். ஷிவம் துபே தேர்வாக இருந்தது, என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory