» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆப்கான் வீரரை பேட்டால் அடிக்க முயன்ற பாக். வீரர்...!
வியாழன் 8, செப்டம்பர் 2022 11:07:00 AM (IST)
பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவை பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆசிய கோப்பை டி20 தொடரில் நேற்று சார்ஜாவில் நடந்த சூப்பர் 4 சுற்றில் கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது. போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவை பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் 19வது ஓவரில் பரீத் பந்துவீச்சில் சிக்சர் அடித்த ஆசிப் அலி, அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பரீத் ஆவேசமாக கத்திய நிலையில், ஆத்திரம் அடைந்த ஆசிப் அலி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தனது பேட்டையும் ஓங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நடுவர்களும் சக வீரர்களும் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
ரசிகர்கள் மோதல்!
மேலும், மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் மீது இருக்கைகளை கொண்டு தாக்கியதால் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து, இரு தரப்பினரும் மைதானத்திற்கு வெளியே சாலைகளில் மோதிக் கொண்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சிலரை அடையாளம் கண்டுள்ள ஷார்ஜா காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளியேறியது இந்தியா
கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் இருந்தது ஒரு விக்கெட் மட்டுமே. 10-வது பேட்டராகக் களமிறங்கிய 19 வயது நசீம் ஷா, ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபரூகி வீசிய கடைசி ஓவரில் முதல் இரு பந்துகளிலும் சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணிக்கு அற்புதமான வெற்றியை வழங்கினார்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ஞாயிறன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தானின் வெற்றியால் ஆப்கானிஸ்தான், இந்தியா என இரு அணிகளும் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளன.