» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம்
வெள்ளி 15, ஜூலை 2022 3:33:23 PM (IST)
தென் கொரியாவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது.
தென் கொரியா, சொ்பியா அணிகள் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன. முன்னதாக புதன்கிழமை முடிவில் இந்தியா, 2 தங்கம், 1 வெண்கலத்துடன் 2-ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், கடைசி நாளான வியாழக்கிழமை ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் அா்ஜுன் பபுதா/சாஹு துஷாா் மனே/பாா்த் மகிஜா அடங்கிய இந்திய அணி 17-15 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் சியுங்கோ பாங்/சங்டோ கிம்/ஹாஜுன் பாா்க் கூட்டணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதில் அா்ஜுன், சாஹுவுக்கு இப்போட்டியில் இது 2-ஆவது தங்கப் பதக்கமாகும்.
அடுத்ததாக, மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் அணிகள் இறுதிச்சுற்றில் இந்தியாவின் இளவேனில் வலரிவன்/மெஹுலி கோஷ்/ரமிதா கூட்டணி 10-16 என்ற கணக்கில் தென் கொரியாவின் ஜிஹியோன் கியும்/யுன்சியோ லீ/டேயோஹ் குவோனிடம் தங்கத்தை இழந்து வெள்ளி பெற்றனா்.
10 மீட்டா் ஏா் பிஸ்டல் அணிகளில், ஆடவா் பிரிவில் இந்தியாவின் ஷிவா நா்வால்/நவீன்/சாகா் தாங்கி ஆகியோா் 15-17 என்ற கணக்கில் இத்தாலியின் பாவ்லோ மோனா/அலெசியோ டொராச்சி/லுகா டெஸ்கோனியிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றனா். மகளிா் பிரிவிலும் ரிதம் சங்வான்/யுவிகா தோமா்/பாலக் ஆகியோா் கூட்டணி 2-10 என தென் கொரிய அணியிடம் தோற்று வெள்ளி பெற்றனா். இதுதவிர, ஆடவருக்கான டிராப் அணிகள் பிரிவில் இந்தியாவின் பிருத்விராஜ் தொண்டைமான்/விவான் கபூா்/போவ்னீஷ் மெந்திராட்டா கூட்டணியும் வெள்ளிப் பதக்கம் பெற்றது.