» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி-20 உலக கோப்பையில் அஸ்வினை சேர்க்க வேண்டும்: கவாஸ்கர் விருப்பம்
செவ்வாய் 24, மே 2022 11:57:27 AM (IST)
டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்க வேண்டும் என்று கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முத்திரை பதித்து வருகிறார். 14 ஆட்டத்தில் 10 இன்னிங்சில் ஆடி 183 ரன்கள் எடுத்தார். டெஸ்டில் ஸ்டிரைக்ரேட் 146.40 ஆகும். ஒரு அரை சதம் அடித்துள்ளார். 11 விக்கெட் வீழ்த்தினார். 35 வயதான அவர் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 23 பந்தில் 43 ரன் (அவுட் இல்லை) எடுத்து ராஜஸ்தான் அணி 2-வது இடத்தை பிடிக்க காரணமாக திகழ்ந்தார்.
இந்த நிலையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: எந்த வரிசையிலும் தன்னால் சிறப்பாக ஆட முடியும் என்பதை அஸ்வின் நிரூபித்து உள்ளார். மேலும் அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரர் ஆவார். 5 சதம் எடுத்துள்ளார். எந்த வரிசையில் எப்படி ஆட வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு அஸ்வின் தேவையானவர். அவரை தேர்வு செய்ய வேண்டும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதிக்கும் அவர் நீக்கப்படக்கூடியவர் அல்ல. இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.