» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரஜினி, கங்குலியின் தீவிர ரசிகன் நான்: வெங்கடேஷ் ஐயர்!
வெள்ளி 24, செப்டம்பர் 2021 5:02:48 PM (IST)
ரஜினி, கங்குலியின் தீவிர ரசிகன் நான் என ஐபிஎல் போட்டியின் புதிய நட்சத்திரமான வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.
கொல்கத்தா அணி வீரராக அசத்தி வருகிறார் வெங்கடேஷ் ஐயர் . ஆர்சிபி அணிக்கு எதிராக 41* ரன்கள் எடுத்த வெங்கடேஷ் ஐயர், மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 53 ரன்கள் எடுத்து மேலும் அசத்தினார். வெங்கடேஷ் ஐயர், ஒரு பேட்டியில் கூறியதாவது: ஆரம்பத்தில் கொல்கத்தா அணிக்கு கங்குலி தலைமை தாங்கியதால் அந்த அணியில் பங்குபெறவே முதலில் விரும்பினேன். கேகேஆர் அணி என்னைத் தேர்வு செய்ய ஆர்வமாக இருந்தேன். அதேபோல தேர்வு செய்தார்கள். எனக்கு அது கனவுத் தருணம்.
தாதாவின் (கங்குலி) மிகப்பெரிய ரசிகன் நான். உலகம் முழுக்க அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். அவர்களில் நானும் ஒருவன். என்னுடைய பேட்டிங் திறமையில் கங்குலி முக்கியப் பங்கு வகித்துள்ளார். என்னுடைய சிறுவயதில் வலது கை பேட்ஸ்மேனாகவே இருந்தேன். ஆனால் கங்குலியைப் போல விளையாட எண்ணினேன். அவர் சிக்ஸ் அடிப்பது போல, அவர் பேட்டிங் செய்யும் விதம், அவர் பந்துவீசும் விதம், அவருக்குத் தெரியாமலேயே என் வாழ்வில் கங்குலி முக்கியப் பங்கு வகித்துள்ளார். அதற்காக அவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ரஜினியின் மிகப்பெரிய ரசிகன் நான். ரஜினியை நேரில் பார்க்கும் தருணம் தான் என் வாழ்வின் முக்கிய நிகழ்வாக இருக்கும். ரஜினி நடித்த அனைத்துப் படங்களையும் நான் பார்த்துள்ளேன். ஒருமுறை இந்தூரில் இருந்தபோது சென்னைக்குச் சென்று, ஒரு திரையரங்கில் டிக்கெட் வாங்கி ரஜினி படத்தைப் பார்த்தேன். அந்தளவுக்கு அவருடைய தீவிரமான ரசிகன். அவருடைய வசனங்களில் எனக்குப் பிடித்தது, என் வழி தனி வழி என்றார்.