» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்
புதன் 25, ஆகஸ்ட் 2021 11:50:30 AM (IST)
டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நேற்று கோலாகலமாகத் துவங்கியது. இதில், இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாராஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நேற்று துவங்கியது. செப்டம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்ட இருக்கிறார்கள். டோக்கியோவில் அரங்கேறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிக வீரர்களை கொண்ட இந்திய அணி கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி ஈட்டி எறிதல் வீரர் தேக் சந்த் தேசியக் கொடியை ஏந்தி சென்றார்.