» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு: டெல்லியில் பாராட்டு விழா!
செவ்வாய் 10, ஆகஸ்ட் 2021 11:13:04 AM (IST)
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு டெல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றது. ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த நிலையில், இந்திய வீரர்-வீராங்கனைகள் நேற்று நாடு திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், தக்கம் வென்ற வீரர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் டெல்லியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. டெல்லி அசோகா ஹோட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர், இணை மந்திரி நிசித் பிரமாணிக், சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.
விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பேசுகையில், ‘நீரஜ் சோப்ரா, பஜ்ரங் புனியா, லவ்லினா முதல் மற்ற வீரர்-வீராங்கனைகள் அனைவரும் புதிய இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒரு புதிய இந்தியாவின் புதிய ஹீரோக்கள் ஆவர். விளையாட்டு துறைக்கு சாத்தியமான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுவதை உறுதி செய்வோம்’ என்றார்.
இதேபோல் பதக்கம் வென்ற வீரர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டதுடன், அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மேடையில் ஏறியபோது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். அவருக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய நீரஜ் சோப்ரா, இந்த தங்கப் பதக்கம் எனக்கு மட்டும் சொந்தமானதல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்குமானது என்றார்.