» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா!
திங்கள் 19, ஜூலை 2021 10:46:24 AM (IST)
இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதே சமயம் ஒரு நாள் மற்றும் டி-20 தொடரில் பங்கேற்பதற்காக ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட 2ம் தர இந்திய அணி இலங்கைக்கு பயணித்துள்ளது. இதன்படி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இலங்கை தொடக்க ஆட்டக்காரர்களான அவிஷ்கா மற்றும் மினோத் ஓரளவு அடித்து ஆடி ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 25 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து திணறியது. எனினும், அடுத்து விளையாடிய சரித் 38, தசுன் சனகா 39 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை 262 ரன்களை எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், தீபக் சஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகள், குருணல் பாண்ட்யா மற்றும் ஹர்தீக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிருத்வி ஷா 43 ரன்களில் பெர்னாண்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இஷான் கிஷன் (59), மணீஷ் பாண்டே (26) ரன்களில் ஆட்டமிழந்தனர். தவானுடன் இணைந்து விளையாடிய சூர்ய குமார் யாதவ் 31 ரன்கள் எடுக்க இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் தவான் 86 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் தனஞ்ஜெயா 2 விக்கெட்டுகளும், லக்ஷன் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பிரித்வி ஷா, இஷான் கிஷனின் அதிரடி ஆட்டம், கேப்டன் தவணின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 24 பந்துகளில் 9 பவுண்டரி உள்ளிட்ட 43 ரன்கள் குவித்த தொடக்க வீரர் பிரித்வி ஷாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இலங்கைக்கு இரண்டாம் தர இந்திய அணியை அனுப்பி அவமதித்துவிட்டார்கள் என்று இலங்கை முன்னாள் கேப்டன் ரனதுங்கா கூறியதற்கு தகுந்த பதிலடியை இந்திய அணி வழங்கியுள்ளது.