» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குதிரை பேர வழக்கில் அதிரடி திருப்பம்: முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு!

செவ்வாய் 7, ஜூலை 2026 3:49:21 PM (IST)

SenthilBalajiFile.jpg

ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியைத் கவிழ்ப்பதற்குக் சதித்திட்டம் தீட்டி, த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் குதிரை பேரம் நடத்தப்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, தன்னிடம் ரூ.35 கோடி தருவதாகப் பேரம் பேசினார்கள் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையின் முடிவில், த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரைப் போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரில்தான் இந்த ரூ.35 கோடி பேரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் ஜூலை 6-ஆம் தேதி (நேற்று) நேரில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகிய இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். எனினும், நேற்று இருவரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இருவரும் விசாரணைக்கு ஆஜராகாததால், அவர்கள் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் அனுப்பிப் போலீசார் உஷார்படுத்தியுள்ளனர். மேலும், அடுத்தகட்டமாகக் கைது நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதா அல்லது மீண்டும் சம்மன் அனுப்புவதா என்று போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் நடத்தப்பட்ட குதிரை பேரத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory