» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது!

ஞாயிறு 9, நவம்பர் 2025 9:20:41 AM (IST)

திண்டிவனம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும், திண்டிவனம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 12-ம் வகுப்பு மாணவனுக்கும் நடன பயிற்சி பள்ளிக்கு சென்றபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே காதலாக மலர்ந்தது.

அவர்கள் இருவரும் கடந்த 6-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் அதிகாலை சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இருவரும் வந்துகொண்டிருந்தனர். திண்டிவனம் மன்னார்சாமி கோவில் அருகே வந்தபோது அங்கு ரோந்து பணியில் இருந்த பிரம்மதேசம் போலீஸ்காரர் இளங்கோ அவர்கள் வந்த மோட்டாா் சைக்கிளை மறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ்காரர் இளங்கோ அந்த மாணவனிடம் நீ வீட்டிற்கு செல் என்றும், நான் மாணவியை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பாதுகாப்பாக வீட்டில் விட்டு விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். இதனால் மாணவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஆனால் இளங்கோ மாணவியை பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லாமல் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு இளங்கோ பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர், மாணவியை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது மாணவி போலீஸ்காரர் இளங்கோ தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், அந்த புகார் திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் இளங்கோவை அதிரடியாக கைது செய்தனர். பயிரை வேலியே மேய்ந்தது போல பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory