» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெரியார் குறித்து அவதூறாக பேச்சு : சீமான் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 10, ஜனவரி 2025 8:32:03 PM (IST)
பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவில் மனுதாரரின் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடலூரில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பெரியாா் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது பேச்சுக்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதைக் கண்டித்து திராவிடா் இயக்கம், பெரியாரிய இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே இந்த விவகாரத்தில் சீமானின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது. எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்து அறிக்கையை ஜனவரி 20ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.