» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விக்கிரவாண்டி தேர்தல் அலுவலர் தகுதி இல்லாதவர் - அன்புமணி சாடல்!

செவ்வாய் 9, ஜூலை 2024 5:48:34 PM (IST)

"விக்கிரவாண்டி தேர்தல் அலுவலர் பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட நடத்துவதற்கு தகுதியில்லாதவர்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தாம்பரம் அருகே திருவஞ்சேரியில் உள்ள ஸ்பார்க் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான தரவரிசை பேட்மிண்டன் போட்டிகள் செவ்வாய்க்கிமை நடைபெற்றது. இதில் மாநில இறகுப் பந்து கழக தலைவரும், பாமக தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார். போட்டிகளை தொடங்கி வைத்து சிறிது நேரம் திரைப்பட இயக்குநர் லிங்குசாமியுடன் அவரும் இறகுப் பந்து விளையாடினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "தமிழக வீரர்கள் ஒலிம்பிக்கில் போட்டியிட்டு வெல்வதற்கு மாவட்டம் தோறும் இறகுப் பந்துக்கான உள் விளையாட்டு அரங்கு அமைத்து வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை வைக்கிறேன். விக்கிரவாண்டி தேர்தலை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. அங்குள்ள தேர்தல் அதிகாரி ஒரு பஞ்சாயத்துத் தேர்தலை நடத்தக்கூட தகுதி இல்லாதவர். விக்கிரவாண்டியில் பணத்தையும், பொருளையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.

எதையும் கண்டும் காணாமல் தேர்தல் அலுவலர் உள்ளார். தமிழக தேர்தல் ஆணையரும் விக்கிரவாண்டி வந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என பார்க்காமல் அலுவலகத்தில் டீ, பிஸ்கெட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். திமுகவினர் 400-க்கும் மேற்பட்ட தேர்தல் பணிமனைகளை ஒவ்வொரு ஊரிலும் பல லட்சம் செலவில் அமைத்துள்ளனர். இது ஒன்றே திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய போதுமானது. 

எதிர்கட்சியினர் கூட்டத்துக்கு யாரும் போகக்கூடாது என்பதற்காக ஆடு மாடுகளைப் போல் மக்களை பணம் கொடுத்து அடைத்து வைத்தனர்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருமாவளவன் கூறிய கருத்துகளை நானும் வரவேற்கின்றேன். சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேபோல் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு நான் சிபிஐ விசாரணை கோரினேன். அதனை ஏற்க திருமாவளவன் தயாரா?” என கேள்வி எழுப்பினர்.

மேலும் பேசிய அவர், "தமிழக சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டுக்கு போதைப்பொருட்கள் தான் காரணம். கூலிப்படை கலாசாரத்தை வேரோடு ஒழிக்க வேண்டும். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சென்னை ஆணையர் அருண் என்ன செய்கிறார் என்று பார்ப்போம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்கள் குறித்து பாமக ஆய்வு நடத்தி வருகிறது. அதில் சில நன்மைகளும் உள்ளன. இருப்பினும் அதுகுறித்து தற்போது கருத்துச் சொல்ல முடியாது” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory