» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையப்பர் கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்: ஜூன் 21 இல் தேரோட்டம்
வியாழன் 13, ஜூன் 2024 12:05:13 PM (IST)
திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா இன்று (ஜூன் 13) கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றும், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர் உடைய கோயிலுமான அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி அம்பாளுக்கு பால் மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்புப் பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
பூங்கோயில் சப்பரத்தில் உள்பிரகாரத்தில் சுவாமி உலா வந்த பின்பு 5.30 மணிக்குள் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நமச்சிவாய முழக்கத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி-அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதியுலா நவந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட திருத்தேர் ஓடும் திருவிழா வரும் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.