» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக் கடை முன்பு மதுபானங்களின் விலைப் பட்டியல்: செந்தில் பாலாஜி உத்தரவு

வெள்ளி 26, மே 2023 5:00:24 PM (IST)



மதுபானங்களின் விற்பனை விலைப் பட்டியலை டாஸ்மாக் கடையின் முன்புறத்தில் வைக்க வேண்டும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை ஆட்சியர்களின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் ச.விசாகன் மற்றும் தலைமை அலுவலக அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் "அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் நண்பகல் 12.00 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டும். இதில் எந்தவித விதிமீறல்கள் இருக்ககூடாது தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும், அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்கப்பட வேண்டும். மாவட்ட மேலாளர்கள் அனைவரும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாகதெரியும்படி மதுபானக் கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை அனைத்து மாவட்ட மேலாளர்களும் உறுதி செய்ய வேண்டும். முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல அளவிலான பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் தத்தம் மாவட்டங்களில் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் ஏதேனும் செயல்படும்பட்சத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாரயம், போலி மதுபானங்கள் விற்கப்படுவதை கண்டறியவும் மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து, காவல்துறைக்குத் தெரிவித்து, காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மேலாளர்கள் தினம்தோறும் எந்தவொரு மாவட்டத்திலும் மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும், அப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அனைத்து விதிமுறைகளையும் செவ்வனே செயல்படுத்தி சிறப்பாகச் செயல்பட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads











Thoothukudi Business Directory