» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டி : ஜான்பாண்டியன் அறிவிப்பு

சனி 3, டிசம்பர் 2022 12:06:52 PM (IST)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவேன் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கூறினார். 

ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தேவேந்திரகுல வேளாளர் பட்டியலில் இருந்து வெளியேற்ற கோரிக்கை கையெழுத்து இயக்க தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா, தென்காசி இசக்கி மகாலில் நடைபெற்றது. 

மண்டல செயலாளர் இன்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கணேசன், மாரியப்பன், வடக்கு மாவட்ட செயலாளர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். த.ம.மு.க. நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் வியங்கோ பாண்டியன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

இதன் பின்னர் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: எனது பிறந்த நாளையொட்டி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வருகிற 2023 ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி சங்கரன்கோவில் பகுதியில் மாநிலம் தழுவிய 'பட்டியல் வெளியேற்ற கோரிக்கை' குறித்த மாநாடு நடக்கிறது. மேலும் வருகிற அக்டோபர் மாதம் 9-ந் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபயணம் தொடங்குகிறேன். 

தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திதான் போராட்டம் நடத்துகிறோம். இதற்காக கையெழுத்து இயக்கத்தில் குறைந்தபட்சம் 5 லட்சம் பேர் கையெழுத்திட்டு, அதனை தமிழக முதல்-அமைச்சர், கவர்னர், பிரதமர் ஆகியோரிடம் கொடுப்போம். தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் சங்கமும் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.

வழக்கமாக நாங்கள் ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்துதான் தேர்தலில் போட்டியிடுகிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைப்போம். எந்த கூட்டணியாக இருந்தாலும் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நான் (ஜான் பாண்டியன்) போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் நெல்லையப்பன், சண்முகசுதாகர், அமுதமுரளி, அருண் பிரின்ஸ், தமிழரசன், நளினி சாந்தகுமாரி, மாவட்ட இணை செயலாளர் முருகேசன், நகர செயலாளர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory