» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வேளாங்கண்ணி இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் - விஜய் வசந்த் எம்.பி., வலியுறுத்தல்!
சனி 3, டிசம்பர் 2022 11:54:13 AM (IST)
சென்னையில் தென்னக இரயில்வே பொது மேலாளரை சந்தித்த குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், பல்வேறு இரயில்வே சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.
குறிப்பாக குமரி, நெல்லை, விருதுநகர், மதுரை போன்ற தென்மாவட்ட மக்கள் கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம், உறவுகளை சந்திப்பது மற்றும் சுற்றுலா சம்மந்தமாக அதிக அளவில் மக்கள் சென்னை, கன்னியாகுமரி வழித்தடத்தில் பயணிப்பதால், போதிய இரயில்கள் இல்லாததால் மக்கள் கார்களிலும், பேருந்துகளிலும் சென்று பெரும் சிரமம் அடைவதோடும் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் அதிக பண விரயம் ஏற்படும். எனவே சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் அதிக இரயில்களை இயக்க வேண்டும் என்பதால்
ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனால் தென் மாவட்டங்களில் வசித்து வரும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மக்களுக்காகவும் தமிழக தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும் ஐதராபாத் சென்று வர நேரடி இரயில் சேவை முக்கியமானது என எடுத்துக் கூறி ஐதராபாத்-தாம்பரம் இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வலியுறுத்தினார்.
வேளாங்கண்ணிக்கு இரயில் சேவை : தஞ்சை பெரிய கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் போன்ற மும்மத சுற்றுலாத் தளங்கள் செல்வதற்கு திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி வழித்தடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணியளவில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கள் காலை திருவனந்தபுரம் வந்து சேரும்படி இயக்க வலியுறுத்தினார். அதற்கு ஏதுவாக சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் இரயிலை, திருவனந்தபுரம் வரை நீட்டிக்க கோரிக்கை விடுத்தார்.
வாரத்தில் மூன்று நாள் இயக்கப்படும் தாம்பரம்-நாகர்கோவில் இரவு நேர இரயிலை தினசரி இரயிலாக இயக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். கொரோனா காலத்திற்கு முன்பாக பயணிகள் இரயிலாக இயக்கப்பட்ட மதுரை - புனலூர் இரயில் தற்போது விரைவு இரயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பாக பள்ளியாடி, குழித்துறை மேற்கு, ஆரல்வாய்மொழி ஆகிய இரயில் நிலையங்களில் நின்று சென்றதை சுட்டிக்காட்டி மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் இந்த இரயில் நிலையங்களில் மதுரை - புனலூர் விரைவு வண்டி நின்று செல்ல வேண்டுமென வலியுறுத்தினார்.
இதனை கேட்ட தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், மேற்கூறிய குறிப்பிட்ட இரயில் நிலையங்களில் மதுரை - புனலூர் விரைவு இரயில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார். மேலும் அனந்தபுரி மற்றும் நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில்களின் நிறுத்தங்களை குறைக்காமல் அதிவிரைவு இரயிலாக மாற்றி இயக்கவும் கன்னியாகுமரி நாடாளுமன்ற விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களையும் மேம்படுத்தி, அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டுமென்றும் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் இரயில் தண்டவாளங்களை கடந்து செல்ல ஏதுவாக மேம்பாலங்கள் அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தினார். குறிப்பாக கப்பியறை பஞ்சாயத்து, பள்ளியாடி அருகில் இணைப்பு பாலம் குழித்துறை மேம்பாலம், நாகர்கோவில் ஜங்ஷன் இரயில் நிலையத்தின் அருகில் ஊட்டால் மொடு இரயில்வே கிராஸிங்கில் மேம்பாலம் மற்றும் குழித்துறை மேற்கு கடந்தான் கோடு இணைப்பு பாலமும் உடனடியாக அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், குமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு இரயில்வே கோரிக்கைகளை கேட்டறிந்த தென்னக இரயில்வே பொது மேலாளர் மற்றும் உடன் இருந்த அதிகாரிகள் கோரிக்கையின் மீது தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.