» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6பேர் உயிரிழந்த சம்பவம்: சமக தலைவர் சரத்குமார் இரங்கல்!
புதன் 5, அக்டோபர் 2022 11:11:20 AM (IST)
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், சிலுவைப்பட்டி கிராமத்தைச் சார்ந்த நபர்கள் தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை நிறைவு செய்த சார்லஸ், பிரதீவ் ராஜ், பிரவீன் ராஜ் உட்பட 6 பேர், கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றதில் எதிர்பாராத விதமாக திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது.
விழாக்காலங்களை மகிழ்வுடன் கொண்டாட, விரும்பி, தூத்துக்குடியில் இருந்து 52 பேர் ஆன்மீக சுற்றுலாவிற்கு புறப்பட்டு சென்ற போது கொள்ளிடம் பகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நேர்ந்த இத்துயரச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமான பரிதாபத்திற்குரியது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம், இது போன்ற விபரீதங்கள் நிகழ்ந்து கொண்டே இருப்பதற்கு தமிழக் அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஆற்று நீரோட்டம் சீரற்று இருக்கும் சமயங்களில் குளிப்பதற்கு தடை விதித்தும், அதிகாரிகள் அதனை கண்காணித்து இனி இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மேலும், கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.