» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உள்ளூர் விடுமுறை எதிரொலி: குற்றால அருவிகளில் குவிந்த மக்கள்... உற்சாக குளியல்..!
புதன் 10, ஆகஸ்ட் 2022 5:07:42 PM (IST)
தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை என்பதால் குற்றால அருவிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் தான் சீசன் தொடங்கியது. தற்போது சீசன் மிகவும் அருமையாக உள்ளது. சாரல் மழை விட்டுவிட்டு பெய்கிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து குவிந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
மெயின் அருவியில் ஆண்கள் கூட்டம் அதிகரித்ததால் அவர்களை நீண்ட வரிசையில் நிறுத்தி போலீசார் குளிக்க அனுமதித்தனர். மெயின் அருவியில் நேற்று காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். சிறிது நேரத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. எனவே, பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் போலீசார் அனுமதித்தனர். இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக குளித்துச்சென்றனர்.
இன்று ஆடித்தபசை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால் குற்றாலத்திற்கு தென்காசி மாவட்ட மக்கள் அதிகமானோர் வந்து அருவிகளின் உற்சாக குளியல் நடத்துகின்றனர்.