» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
புதன் 10, ஆகஸ்ட் 2022 4:22:14 PM (IST)
இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 20 அரசு பள்ளிகளில் உயர்தர தொழில் நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளை சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் உயர் தொழிற்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பை தலா 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாம்பன்குளம், குமாரபுதுக் குடியிருப்பு, வள்ளியூர் கீழ்தெரு, அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளை ராதாபுரம் எம்.எல்.ஏவும் தமிழக சபாநாயகருமான அப்பாவு தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை நடத்தினார்.
அப்போது வள்ளியூர் கலையரங்கு தெருவில் உள்ள யூனியன் நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட மதிய உணவு குறித்து ஆய்வு மேற்கொண்டு தயார் செய்த உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். நிகழ்ச்சியில் வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன், செயல் அலுவலர் சுஷ்மா, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் கவுன்சிலர்கள், அரசுஅதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.