» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சொந்த வீட்டிலேயே 550 பவுன் நகை திருடி கள்ளக் காதலிக்கு பரிசளித்த தொழிலதிபர் கைது!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 10:58:31 AM (IST)
கள்ளக் காதலியின் ஆடம்பர வாழ்க்கைக்காக தனது வீட்டில் இருந்து 550 சவரன் தங்கத்தை திருடிய தொழிலதிபர் மற்றும் அவரது காதலி கைது செய்யப்பட்டனர்.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான எம் சேகர் (40) என்பவர், பூந்தமல்லியில் பேக்கரி வைத்துள்ளதுடன், நிதி வியாபாரத்தையும் நடத்தி வருகிறார். சேகரின் தம்பி ராஜேஷ், தனது வீட்டில் இருந்து 550 சவரன் தங்கம் காணாமல் போனதாக பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார்.
ராஜேஷ் தனது மனைவியை பிரிந்து ஒரு வருடத்திற்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவர் இல்லாததைப் பயன்படுத்தி, வீட்டில் உள்ள அனைத்து லாக்கர்கள் மற்றும் அலமாரிகளின் சாவியை வைத்திருந்த சேகர், லாக்கரில் இருந்த தனது நகைகளை எடுத்து சுவாதி என்ற பெண்ணிடம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சேகருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் உள்ள நிலையில், வேளச்சேரியைச் சேர்ந்த சுவாதி (22) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. சேகரின் மனைவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டில் இருந்த நகைகள் தவிர, சேகர் தனது தாயாரிடம் இருந்த நகைகள் மற்றும் தலா நூறு கிராம் எடையுள்ள ஏழு தங்கக் கட்டிகளை எடுத்து கொடுத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
ராஜேஷ் புகாரில், திருடப்பட்ட நகை 550 சவரன்களுக்கு மேல் இருக்கும் என்று குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். வீட்டில் இருந்து குறைந்தது 200 சவரன்கள் திருடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடப்பட்ட நகைகளுடன், சேகர் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுவாதிக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் காரினை வாங்கி கொடுத்துள்ளார். நேற்று பூந்தமல்லி போலீஸார் இருவரையும் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.