» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜன.26ல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை
வெள்ளி 21, ஜனவரி 2022 5:32:18 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தினமான வருகிற 26-ம் தேதி சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கோவிலில் சாமி தரிசனத்திற்கு வார இறுதி நாட்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. குமரி மாவட்டத்தில் கடந்த 19-ம் தேதி மீண்டும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்றும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்தனர்.
வார இறுதி நாளையொட்டி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மீண்டும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள கோவில் பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று அனுமதிக்கப்படவில்லை. நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இன்று காலை வழக்கமான பூஜைகள் நடந்தது.
கோவில் நுழைவாயில் மூடப்பட்டிருந்தது. நுழைவாயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் கோவில் வெளியே நின்று தரிசனம் செய்து விட்டு சென்றனர். இதேபோல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் வழக்கமான பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தினமான 26-ம் தேதியும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.