» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வரப்பை வெட்டியதால் தகராறு: விவசாயி கொலை - வாலிபர் கைது
புதன் 27, அக்டோபர் 2021 10:14:02 AM (IST)
சொக்கம்பட்டி அருகே விவசாயியை வெட்டிக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி அரண்மனை தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (64), விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன் (32). இவர்களுக்கு சொந்தமான வயல் பகுதி வைரவன்குளத்தில் உள்ளது. இந்த வயல்களுக்கு அருகில் சொக்கம்பட்டி கர்ணம் தெருவைச் சேர்ந்த சந்தனபாண்டியன் (40) என்பவருக்கு சொந்தமான வயலும் உள்ளது.
கருத்தப்பாண்டி, அவரது மகன் கார்த்திகேயன் ஆகியோர் வயல் வரப்பு பகுதியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த சந்தனபாண்டியன் நீங்கள் எப்படி வரப்பை வெட்டலாம் என்று அவதூறாக பேசி, தகராறு செய்துள்ளார். மேலும், ஆத்திரம் அடைந்த சந்தனபாண்டியன் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கருத்தப்பாண்டியை வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கருத்தப்பாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.