» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்: வைகோ, கனிமொழி, உதயநிதி பங்கேற்பு
திங்கள் 20, செப்டம்பர் 2021 4:36:32 PM (IST)
தமிழகம் முழுதும் மத்திய அரசைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராசா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க இளைஞரணி அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டின் முன்பு மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். சென்னை வேப்பேரி பெரியார் திடல் முன்பு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையிலும், அசோக் நகர் விடுதலை சிறுத்தைகள் அலுவலகத்தில் சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் தலைமையிலும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு இன்று காலை மத்திய அரசை கண்டித்து கம்பத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. இதில் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று கருப்பு கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கனி மொழி எம்.பி. கூறியதாவது; கொரோனா காலத்தில் விலைவாசி உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளதுவிவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என கூறினார்.அதேபோல் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.