» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.3கோடியில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் திறப்பு
திங்கள் 20, செப்டம்பர் 2021 10:58:10 AM (IST)
பத்மநாபபுரம், அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை அமைச்சர் த.மனோதங்கராஜ் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் , பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன், முன்னிலையில் திறந்து வைத்து, தெரிவிக்கையில்: பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் ஒரு நிமிடத்தில் 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உதவியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் 200 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் ஆக்ஸிஜன் வழங்கமுடியும். கொரோனா 3-வது அலை வந்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதே நடவடிக்கை ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கும், கொரோனா 3-வது அலையினை எதிர்கொள்ளும் வகையில் தேவையான ஆக்ஸிஜன்களை மருத்துவமனையிலேயே உற்பத்தி செய்வதற்காக பிரதமமந்திரி குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண அவசர நிலை நிதியின்கீழ் ரூ.3 கோடி மதிப்பில் ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் கடந்த 13.07.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காணும் வகையில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு என்னென்ன வசதிகள் தேவையோ அவற்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும். இவ்வாறு, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.எ.பிரகலாதன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் டி.சி.வேல்ராஜ், கண்காணிப்பாளர் மரு.ராஜைய்யன், பொறி.வர்க்கீஸ், மணி, ஜெகதேவ், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.