» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செல்போன் பிரச்னையில் வாலிபர் வெட்டி கொலை : நண்பர்கள் 3 பேர் கைது - பரபரப்பு தகவல்!!
வியாழன் 16, செப்டம்பர் 2021 5:30:50 PM (IST)
வாசுதேவநல்லூர் அருகே செல்போன் பிரச்னையில் பட்டதாரி வாலிபரை வெட்டி படுகொலை செய்த அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள இராமநாதபுரம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரது மகன் விஜய் கணேசன் (21). பட்டதாரி. இவரும் அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகன் முத்துக்கிருஷ்ணன் (21), அருளாச்சி வெள்ளத்துரை பாண்டியன் மகன் கோபி ஆனந்த் (23), அருளாச்சி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் மகேந்திரன் (18) ஆகியோரும் நண்பர்கள்.
இவர்கள் அடிக்கடி ஒன்றாக மதுக்குடிப்பது வழக்கமாம். இந்நிலையில் விஜய் கணேசனிடம் முத்துக்கிருஷ்ணன் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இத்தொகையை முத்துக்கிருஷ்ணன் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முத்துக்கிருஷ்ணனின் செல்போனை விஜய் கணேசன் வாங்கிக்கொண்டு ரூ.10ஆயிரத்தை கொடுத்து விட்டு செல்போனை வாங்கிச் செல்லும்படி கூறினாராம். செல்போனை விஜய்கணேசன் வாங்கிச் சென்றது முத்துக் கிருஷ்ணனுக்கு பெரும் அவமானமாக போய்விட்டதாம்.
இதனால் அவர் கோபிஆனந்த், மகேந்திரன் ஆகியோரை அழைத்துக் கொண்டு கூடலூர் மொட்டைமலைக்குச் சென்றுள்ளனர். அங்கு வரும்படி விஜய் கணேசனிடம் கூறியுள்ளனர். விஜய் கணேசனும் அங்கு சென்றுள்ளார். அவர்கள் மது குடித்துள்ளனர். அப்போது செல்போன் பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது.இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்துக்கிருஷ்ணன், கோபிஆனந்த், மகேந்திரன் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து விஜய்கணேசனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த விஜய் கணேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சீமராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய் கணேசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சீமராஜா வழக்கு பதிவு செய்து நண்பரை வெட்டி கொலை செய்த முத்துக்கிருஷ்ணன், கோபிஆனந்த், மகேந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.