» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள்: அக்.21ல் இறுதி விசாரணை
வியாழன் 16, செப்டம்பர் 2021 5:27:58 PM (IST)
மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளின் இறுதி விசாரணை அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியது போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கம் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் இன்று மீண்டும் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஏற்கெனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்த உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கலையரசன், டி.முருகேசன் ஆகியோர் அளித்த அறிக்கைகளையும், நீட் தேர்வு பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கையையும் படித்துப் பார்த்து வாதிட வேண்டியுள்ளதால், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும் இந்த சட்டத்தின் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது அரசுப் பள்ளி மாணவர்கள் நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும், நீட் தேர்வு நடைபெற்றுள்ள நிலையில் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், இந்த வழக்கு தொடர்பாக விரிவாக வாதிட வேண்டிய நிலை உள்ளது என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகவும், நடப்புக் கல்வியாண்டிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதாலும், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 21-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.