» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பழிவாங்கும் நோக்கத்தில் திமுக அரசு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஜெயக்குமார் குற்றச்சாட்டு
வியாழன் 16, செப்டம்பர் 2021 12:07:46 PM (IST)
பழிவாங்கும் நோக்கத்தில் திமுக அரசு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது: "திமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தில் ரெய்டு நடவடிக்கையைக் கையிலெடுத்திருக்கிறது. நீதிமன்றம் இருக்கிறது. அங்கு நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம். பொதுவாகவே, அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போதுபோது அதற்கு குற்றத் துணையாக இருக்கிற அமைப்புகளோடு கைகோர்த்து ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதுண்டு.
புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சாக்குபோக்கு சொல்வதற்கு வசதியாக சிலரைக் கையில் வைத்துக் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கு மாறானது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் இது. உள்ளாட்சித் தேர்தல் அறிவித்திருக்கிற நிலையில் பணி செய்யவிடாமல் முடக்குகிற விஷயமாகவே இது மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத இயக்கம் அதிமுக.
இது அரசினுடைய காவல் துறை. ஜனநாயக நாட்டில் நீதிமன்றம் இருக்கிறது. இது மன்னர் ஆட்சி அல்ல. சொத்துக் குவிப்பு குறித்து இவர்கள் எத்தனை சதவிகிதத்தை வேண்டுமானாலும் குறிப்பிடலாம். ஆனால், நீதிமன்றத்தில் நீதியை நிலைநாட்டுகின்ற வகையில் முன்னாள் அமைச்சர்களும், இயக்கமும் இருக்கும். பழிவாங்கும் நோக்கத்தில் கட்சியை முடக்க வேண்டும், மக்கள் மத்தியில் கட்சிக்கு ஒரு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்சியுடன் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது" என்றார் ஜெயக்குமார்.