» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாரத்தில் 3 நாட்கள் தடுப்பூசி செலுத்துவதிலிருந்து விலக்கு : கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கை!
புதன் 15, செப்டம்பர் 2021 10:59:21 AM (IST)
திங்கள், செவ்வாய், புதன்கிழமை ஆகிய 3 நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கிராம செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா தடுப்பூசி எடுப்பதற்கும், வைப்பதற்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினமும் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பண விரயமும் அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே இதனை கொண்டு செல்ல வாகன வசதி வேண்டும்.
கிராம சுகாதார செவிலியர்கள் பிரசவித்த தாய்மார் கவனிப்பு மற்றும் பெண்கள் சுகாதாரம் போன்றவற்றை கவனிக்க வேண்டி உள்ளதால் திங்கள், செவ்வாய், புதன்கிழமை ஆகிய 3 நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு சங்க தலைவி லதா மங்கையர்கரசி, செயலாளர் சங்கரேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் நூற்றுக் கணக்கான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.