» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தற்காலிக மருந்தாளுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
சனி 31, ஜூலை 2021 4:22:12 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் தற்காலிக மருந்தாளுநர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச.கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தென்காசி சுகாதார மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிக்காக தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் 6 மாதங்கள் பணிபுரிவதற்கு 18 மருந்தாளுநர்கள் மாவட்ட நலச் சங்கம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.
மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரியில் மருந்தாளுநர் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு மருந்தாளுநர் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு வருடந்தோறும் புதுப்பித்திருக்க வேண்டும்.
மேற்படி பணியிடத்திற்கான விண்ணப்பபடிவங்கள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், தென்காசியில் 2.8.2021 முதல் 8.8.2021 வரைகாலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை நேரிடையாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் தென்காசி மாவட்ட வலைதளம் https://tenkasi.nic.in/notice_category/recruitment/ ல் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 8.8.2021 மாலை 5 மணிக்குள் நேரிலோ/தபால் மூலமாகவோ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், (பழைய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்) கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தென்காசி 627 811 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். 8.8.2021 மாலை 5 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 10.8.2021 அன்று காலை 10.00 மணி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.