» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காவல்துறையினருக்கு ஒரு நாள் கட்டாய விடுப்பு: சமக தலைவர் ரா.சரத்குமார் வரவேற்பு
சனி 31, ஜூலை 2021 4:12:26 PM (IST)
காவல்துறையினருக்கு ஒரு நாள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் எனவும், விடுப்பு எடுக்காமல் பணியாற்றுபவர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு காவல்துறை தலைமை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மகிழ்ச்சியளிக்கக்கூடிய வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.
7 கோடி தமிழக மக்களுக்கு 1.2 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு ஓய்வின்றி உழைப்பதால் கடும் மன உளைச்சலுக்கும், ஆரோக்கியமற்ற சூழலில் பணி செய்யும் சூழலுக்கும் தள்ளப்பட்டது மட்டுமன்றி, காவல் பணியிலிருந்த சிலர் தற்கொலையில் ஈடுபட்டதும் கண்கூடு.
பணிச்சுமை, குடும்ப வாழ்க்கை முறை இவை அனைத்தையும் காவல் துறையில் பணி புரிபவர்களின் சார்பில் அணுகி அவர்களது வாழ்க்கை நல்ல முறையில் அமைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 08.03.2018 அன்று கேட்டுக் கொண்டேன்.
தற்போது, காவலர்களின் மனச்சுமையை போக்கும் விதமாக, அவர்கள் உடல்நலன் பேணுவதற்கும், குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடுவதற்கும் வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாமாக்கப்பட்டிருப்பது காவல்துறையினர் மட்டுமன்றி பொதுமக்களிடமும் வரவேற்பு பெற்றுள்ளது.
நாள்தோறும் குற்றவாளிகளுடன் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளையும், சவால்களையும் எதிர்கொள்ளும் காவல் துறையினருக்கு, அவர்களது பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் விடுமுறை வழங்கிட டிஜிபி உத்தரவிட்டிருப்பது அவர்கள் மேலும் உற்சாகமாக பணிசெய்வதை ஊக்குவிக்கும். காவல்துறையினருக்கு பெரும் நன்மை உண்டாகக்கூடிய வகையில் இத்தகைய ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.