» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் ஒளிபரப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சனி 19, ஜூன் 2021 3:38:40 PM (IST)
2021 - 2022ம் கல்வி ஆண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று 2021 – 2022ம் கல்வி ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கியும், கல்வி தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல்காரணமாக பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாகபாடங்களை ஒளிபரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
2ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரையான பாடங்களின் புதிய காணொலிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பு நிகழ்வை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். கல்வி தொலைக்காட்சியுடன் 12 தனியார் தொலைக்காட்சிகளிலும் இந்தக் காணொலிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. மேலும், கல்வி தொலைக்காட்சியின் யூ-டியூப் தளத்திலும் பதிவேற்றப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து 2021 - 2022ம் கல்வி ஆண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எ.வ. வேலு, பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஒலி வடிவிலான பாடங்கள் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.