» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுற்றுலா வேன் விபத்து கணவன் - மனைவி பலி : 13 பேர் படுகாயம்!

செவ்வாய் 19, மே 2026 12:33:28 PM (IST)

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் - மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். 13பேர் படுகாயம் அடைந்தனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மாளியாண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் 15க்கும் மேற்பட்டோர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்வதற்காக தனியார் சுற்றுலா வேனில் நேற்று இரவு பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டுள்ளனர். 

இந்த வாகனத்தைப் பொள்ளாச்சி ஆனைமலை பிரைட் கார்டன் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் சசிகுமார் (42) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை 05:35 மணியளவில், இந்தச் சுற்றுலா வாகனம் மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் தாப்பாத்தி பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அதே தடத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் சுற்றுலா வேனின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில், வேனின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பொள்ளாச்சி மாளியாண்டிபட்டியைச் சேர்ந்த விஜயன் (58) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், இந்த விபத்தில் பலியான விஜயனின் மனைவி கலைவாணி (50) மற்றும் வேனில் பயணம் செய்த உறவினர்கள் உட்பட மொத்தம் 14 பேர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் மாசார்பட்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்த 14 பேரையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் உடனடியாக மீட்டு அவசர சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயனின் மனைவி கலைவாணி, மருத்துவர்களின் தீவிர முயற்சிக்குப் பிறகும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

விபத்து குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் ஆன்மீகப் பயணத்தின் போது கணவன், மனைவி விபத்தில் பலியான சம்பவம் பொள்ளாச்சி மற்றும் எட்டயபுரம் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory