» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தென்னை, வாழைகளை சேதப்படுத்திய .காட்டு யானை : கடையம் அருகே பரபரப்பு
புதன் 1, பிப்ரவரி 2023 11:05:14 AM (IST)
கடையம் அருகே தோட்டங்களில் ஒற்றைக்காட்டு யானை புகுந்து தென்னை, வாழை, நெல் பயிரை சேதப்படுத்தியது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டு மாடு, காட்டுப்பன்றி, கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் வனவிலங்குகள் அடிவாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் ஒற்றைக்காட்டு யானை புகுந்துள்ளது. அங்குள்ள தோட்டங்களில் புகுந்து தென்னை, வாழை, நெல் பயிரை சேதப்படுத்தியது. மேலும் ஒரு வீட்டு வேலியை சேதப்படுத்தியது. தகவல் அறிந்த கடையம் வனத்துறையினர் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க சோலார் மின்வேலியை பராமரிக்க வேண்டும், அகழியை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.