» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தி.மு.க. கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது : துரை வைகோ
திங்கள் 5, டிசம்பர் 2022 7:49:58 AM (IST)
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று துரை வைகோ தெரிவித்தார்.
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள கி. ராஜநாராயணன் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தி.மு.க. கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது பெரிய சாபக்கேடு. அவரிடம் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
கவர்னர் தனது கடமையை செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு, தனிப்பட்ட ஒரு இயக்கத்திற்கு, ஒரு சித்தாந்தத்திற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பதும், பணி புரிவதும் ஆரோக்கியமானது அல்ல. பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தினமும் தமிழக அரசு மீது அவதூறுகளை சொல்லி கொண்டிருக்கிறார். அவர் பொறுப்புள்ள அரசியல் கட்சி தலைவராக செயல்பட வேண்டும், என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி துணை பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ்,கோவில்பட்டி நகரசபை தலைவரும் நகர திமுக செயலாளருமான கா. கருணாநிதி, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், கி.ராஜநாராயணன் மகன் பிரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.