» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்துாரில் விடைத்தாள் திருத்தும் மையம் செயல்பட ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்
சனி 3, டிசம்பர் 2022 6:24:32 PM (IST)
திருச்செந்துாரில் விடைத்தாள் திருத்தும் மையம் தொடர்ந்து செயல்படவேண்டும் என்று துாத்துக்குடியில் நடந்த தமிழ்நாடு முதுகலைபட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
துாத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வௌ்ளச்சாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைமை இடத்து செயலாளர் பிரான்சிஸ் ஹென்றி வரவேற்றார்.
மாநிலத் துணைத்தலைவர் மாரிப்பாண்டி சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத்தலைவர் பெருமாள்சாமி, மாநில பொருளாளர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மாவட்டபொருளாளர் சூரியபிரம்மன் மாவட்ட செயல்பாடுகள் குறித்து பேசினார். திருச்செந்துார் கல்வி மாவட்டத்தைலவர் அருள் பெர்னான்டோ வருங்காலங்களில் செயல்படவேண்டிய நிகழ்வுகளை பற்றி எடுத்துக்கூறினார். தொடர்ந்து கூட்டத்தில் திருச்செந்துாரில் விடைத்தாள் திருத்தும் மையம் தொடர்ந்து செயல்படவேண்டும்.
பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது 8 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். சரண்டர் ஒப்படைப்பு தடையை நீக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். நீட் பயிற்சி பணிக்க முதுகலை ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது, ஆசிரியர்களை கற்பித்தல் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் ஆண்டோ ரத்தினம் மகளிர் பங்கு பற்றி எடுத்துகூறினார். துாத்துக்குடி கல்வி மாவட்டத் தலைவர் சிவா நன்றி கூறினார். வருவாய் மாவட்ட நிர்வாகிகள் கல்வி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.