» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பனையேறும் எந்திரம் கண்டுபிடிப்பவருக்கு விருது : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 2, டிசம்பர் 2022 4:17:50 PM (IST)
சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு விருது வழங்கப்படும் என்று தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
பனை மரத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி இலகுவாக ஏறுவதற்காகவும், பனை நுங்கு மற்றும் பிற பொருட்களை திறம்பட அறுவடை செய்வதற்காகவும், கருவிகளைக் கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு மிக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கான விருது வழங்கப்படும்.
இத்திட்டம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும். சிறந்த பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பாளரை தோட்டக்கலை பேராசிரியர் (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்), வேளாண் பொறியியல் பேராசிரியர் (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்), தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் (மத்திய மற்றும் மாநில திட்டம்), தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தால் நியமிக்கப்படும் அலுவலர் ஒருவர் மற்றும், பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி அடங்கிய குழு முடிவு செய்யும்.
பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பதற்காகும் மொத்த செலவு, விலையின் உண்மைத் தன்மை, இயந்திரத்தின் செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த பயனளிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், விருது மேற்கண்ட குழுவால் முடிவு செய்யப்படும். பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவர்கள், இக்குழுவின் முன்னிலையில் செயல்விளக்கம் அளிக்க வேண்டும். கண்டுபிடிப்பாளர்கள் tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். இது தொடர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாமென மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.